சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும்
சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும். இதன் சிறப்புக் கருதி இவ்விரதத்தை மகா சிவராத்திரி என்றும்
அழைப்பதுண்டு.
இஃது மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் இடம்பெறும். இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய
தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல்
ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும்.
இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். இயலõதவர்கள், இல்லத்திலே புனிதமான முறையில்
அநுட்டிக்கலாம்; ஆனால் அன்றைய தினம் சிவாலய தரிசனம் செய்தாக வேண்டும். பகல் முழுவதும்
உண்ணாவிரதமிருந்து பின் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாமப் பூசைகளையும் சிவாலயத்திலே தரிசித்தல்
வேண்டற்பாலது. சிவராத்திரியின் போது மூர்த்திக்கு அபிடேகம் செய்தல், வில்வத்தால்அர்ச்சித்தல், வேதம் ஓதுதல், சிவ
புராணங்கள் படித்தல் பயன் சொல்லல், ஆகியனவும் மிகுந்த நற்பலன்கள் அளிக்கும். சிவராத்திரியன்று நித்திரை
விழிக்கும் போது அப்பொழுதை ஆத்மீக முறையில் சிவ வழிபாட்டிலேயே கழித்தல் வேண்டும். கேளிக்கைகளில் இத்
தவப் பொழுதைக் கழித்தலைத் தவிர்த்தல் அவசியம். சிவராத்திரி சிவ சிந்தனையிலே கழிக்கப்பட வேண்டும்.
சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் உள்ள முகூர்த்தம் இலிங்கோற்பவ காலம் எனப்படும். சிவ இராத்திரி
முழுவதும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்பவ முகூர்த்தம் முடியும் வரை தன்னும் நித்திரை விழித்தல்
நன்று.
சிவராத்திரி
நித்திய சிவராத்திரி,
பட்ச சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
யோக சிவராத்திரி,
மகா சிவராத்திரி
என 5 வகைப்படும்.
மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபிரான் இலிங்கத்தில் தோன்றினார். இத்தினமே மகா
சிவராத்திரியாகும். இத்தினத்தில் சிவ பூசை செய்து சிவ புண்ணியம் பெறலாம். சிவன் அபிடேகப்பிரியராதலால் இரவு
நான்கு யாமமும் இலிங்கோற்ப மூர்த்திக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் கருப்பஞ்சாறு, இளநீர்
ஆகியவற்றால் நான்கு யாமமும் அபிடேகம் செய்து அர்ச்சித்தல் முறையாகும்.
விரதமனுட்டிப்போர் அதிகாலை துயிலெழுந்து தூய நீராடி இல்லத்தில் சிவ வணக்கம் செய்த பின் சிவாலயம் சென்று
தரிசித்தல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் மிகச் சிறப்பõகும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று
இரவு நான்கு யாமமும் சிவதரிசனத்தில் ஈடுபட்டு அபிஷேக அர்ச்சனை பூசைகள் கண்டு களித்து மறுநாட் காலை
சூரியன் உதிப்பதற்கு 6 நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும். அந் நேரத்தில் அந்தணர் ஏழைகளுக்கு தானம்
செய்தலும் உகந்ததாகும்.
சிவலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுமே அடங்கியுள்ளனர். சிவலிங்கத்தின் பீடம் ஆவுடையார்
எனப்படும். இஃது சக்தியின் ரூபம். பாணம் சிவரூபம், பீடம் கிரியாசக்தி வடிவம், இலிங்கம் ஞான சக்தி வடிவம், பீடத்தின்
அடிப்பாகம் பிரம்ம ரூபம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், இக் கருத்தை பின்வரும் பாடல் மூலம் திரு மூலர்
விளக்கியுள்ளார்.
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலம் தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சக்தி சிவன் வடிவாகிப்
பலம் தரு லிங்கம் பரா நந்தியாமே சிவ இரவில் இடம்பெறும் நான்கு யாமப் பூசை முறைகள் பற்றி நோக்குவோம்.
முதலாம் யாமத்தில் பால், தயிர், நெய், கோமயம் கோசலம் ஆகியவை கலந்த பஞ்ச கவ்வியத்தால் இலிங்கோற்பவ
மூர்த்தியை அபிடேகம் செய்து பின்னர் வில்வம் தாமரை ஆகியவற்றால் மூர்த்தியை அர்ச்சித்தல் வேண்டும். நிவேதிக்க
வேண்டியது பயத்தம் பருப்பு, ஓத வேண்டியது யசுர் வேதம். இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்தத்தால் மூர்த்தியை
அபிடேகித்த பின் சந்தனம் தாமரை சாற்றி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேகித்து யசுர்வேதம் ஓத வேண்டும்.
மூன்றாம் யாமத்தின் போது மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்து கற்பூரம் சாதி முல்லை மலர்கள், சாற்றி முக்கிளை
வில்வத்தால் அர்ச்சித்து எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். நான்காம் யாமத்தில்
கருப்பஞ்சாற்றினால் சுவாமியை அர்சித்து அரைத்த குங்குமப்பூ, நந்தியாவட்டை மலர் சாற்றி, நீலோற்பவ மலரால்
அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து மூர்த்தியை வழிபட வேண்டும். ஓத வேண்டியது அதர்வேதம். சிவராத்திரியின்
பின்னணியில் உள்ள சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றை நோக்குவோம். ஒருகால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்குமிடையே தாமே பரம் பொருள் என்ற கர்வம் ஏற்பட்டது. இவர்களது அறியாமையை நீக்க சிவபெருமான் திருவுளங் கொண்டு தான்
ஒரு மாசி மாத அபர பக்கத்தில் சதுர்த்தசியில் பெரியதோர் சோதிப் பிழம்பாக பிரம்ம விஷ்ணுக்கள் முன் தோன்றி
இச்சோதியின் அடி முடியை எவர் காண்கின்றாரோ அவரே உண்மை பரம் பொருள் என அசரீரி மொழிந்தார்.
அசரீரி வாக்குக் கேட்ட அவர்கள் பிரம்மன் அன்னப்பட்சி வடிவமெடுத்து சோதிப் பிழம்பான நுனியைத் தேடி மேல்
நோக்கிப் பறக்கலானார். விஷ்ணு பன்றி வடிவமெடுத்து சோதியின் அடியைத் தேடிப் பூமியைக் குடைந்த வண்ணம் கீழே
செல்லலானார். ஆனால் இருவருமே தமது முயற்சியில் வெற்றியடையவில்லை. விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்
கொண்டார். ஆனால் பிரம்மனோ தான் சோதிப் பிழம்பின் முடியை கண்டதாகவும் தனது கூற்றை நிரூபிக்க தாழம் பூவை
சாட்சி கூறவும் வைத்தார்.
பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா, என்றும் பொய்சாட்சி கூறிய தாழம்பூ சிவ
பூசைக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிவபிரான் சாபமிட்டார். தமது அறியாமையும் அகந்தையும் ஒழிந்து சிவனே
பரம்பொருள் என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனர். சோதிப் பிழம்பு மலையாக இறுகி, சிவனார் இலிங்க வடிவில்
காட்சி தந்தார். இந்த வகையில் சிவ முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரி விரதத்தை சைவ சமயிகள் யாவரும்
முறைப்படி அனுஷ்டித்து எல்லாம் வல்ல ஈசன் இன்னருள் பெற்றுய்ய வேண்டும்.
*
சிவராத்திரி திருத்தகவல்கள்
பாரதத்தில் உள்ள பனிரெண்டு தலங்களை ஜோதிர்லிங்க தலங்கள் என்று சொல்வார்கள். அந்தத் தலங்களை தரிசிப்பது என்பது மிகவும் புண்ணியம் தரக்கூடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் சிவராத்திரியோடு தொடர்புள்ள தலங்கள் சில உள்ளன. இயன்றவர்கள் அருகிலுள்ள சிவத்தலத்துக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. திருவண்ணாமலை
பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட நெருப்பாய் சிவபெருமான் நின்ற இடம் திருவண்ணாமலை. நெருப்பு உருவமாய் இருந்த சிவபெருமான் கல் மலையாய் மாறி காட்சிக் கொடுத்தார். அவரே அண்ணாமலையார் ஆனார். அவர் ஜோதி வடிவில் காட்சிக் கொடுத்ததைத்தான் ‘கார்த்திகை தீபம்’ என்ற குறியீட்டால் விளக்குகிறார். மகா சிவராத்திரி நாளில், லிங்கோத்பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி உருவாக காட்சிக் கொடுத்தார் என்பார்கள். இந்த வகையில் திருவண்ணாமலை சிவராத்திரி விசேஷ தலமாகும்.திருக்கடையூர்
எமனுக்கும் சிவராத்திரிக்கும் தொடர்புண்டு. சிவராத்திரி வேளையில்தான் பெருமானை பூஜிக்கும் மார்க்கண்டேயனைப் பிடிக்க வந்த எமன் உதைப்பட்டான்.
திருவைகாவூர் புராணத்தில் சருக்கம் என்ற பகுதியில் வேடன் ஒருவன் சிவலோகம் செல்ல அதைத் தடுத்தான் எமன். அதனால் ஈசனால் உதைப்பட்டான். அதன் பின்னர் வேடன் செய்த சிவபூஜையின் மகிமையும் சிவராத்திரி மகிமையும் அவனுக்கு சொல்லப்பட்டது என்ற செய்தி விவரிக்கப்பட்டிருக்கிறது.சிவராத்திரி நாளில் செய்யும் பூஜை ஆன்மாக்களின் வினையை நீக்கும்; எமவாதனை அகற்றும். சிவனுடன் ஐக்கியமாக்கும். ஆகையால்தான் பெரியவர்கள் சிவராத்திரி நான்காம் காலத்தில் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவார்கள். திருக்கடையூர் எமன் சிவபூஜை செய்த தலம், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் லிங்கத்திலிருந்து சிவன் வெளிப்பட்ட தலம். எமனை சிவன் காலசம் ஹாரராக வந்து வதம் செய்தார். இந்த வகையில் திருக்கடையூரில் சிவராத்திரி விசேஷம்.

மகாசிவராத்திரி வழிபாடு உருவானது இங்கேதான்!
திருவைகாவூர்
திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி முதலான மகாசிவராத்திரி தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, திருவைகாவூர். வேடனொருவன் மரத்தினின்று சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த கதையை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அப்படி அந்த புராணக் கதை நிகழ்ந்த தலமே திருவை காவூர்தான் என்றறியும் போது, ஆச்சரியம் விழி விரிய வைக்கிறது. வேடன் ஒருவன் மானை பார்த்தான். அவன் அருகில் நகர்ந்து வருவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த வில்வாரண்யத்திற்குள் புகுந்தது. சற்று தூரத்திலிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் துரத்தியபடி உள்ளே நுழைந்தான். தவநிதி முனிவர், ‘‘மானைக் கொல்லாதே.
வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘எனக்கு இந்த மான்தான் வேண்டும்’’ என்று பிடிவாதமாக நின்றான். பிறகு, முனிவரைப் பார்த்து பேசினான்: ‘‘இதோ பாருங்கள், என் வேலை வேட்டையாடுவது. எனக்கு உங்கள் பேச்செல்லாம் புரியவில்லை. ஒழுங்காக மானை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டுக் கூட மானை பிடித்துச் செல்வேன்.’’ தவநிதி முனிவர் மெல்ல சிரித்துக் கொண்டார். ஈசன் ஏதோ ஒரு திருவிளையாடலை அன்றைய தினம் நிகழ்த்தப்போகிறான் என்று தவத்தால் கனிந்திருந்த அவர் மனசுக்குத் தெரிந்தது. ஆகவே வேடன் மிரட்டலுக்குத் தான் பயப்படாததுபோல அமைதி காத்தார்.
அதாவது ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள், உன்னிடம் அந்த மானை ஒப்படைக்கமாட்டேன்’ என்றது அந்த மௌனம். அது வேடனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டியது. அவ ரைத் தாக்க கை ஓங்கினான். அப்போது அருகில் ஓர் உறுமல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய வேடன் தன்னருகே ஒரு புலி நின்றிருந்ததைக் கண் டான். அதன் செந்தணல் விழிகள் கோபத்தை உமிழ்வதைக் கண்டான். அவ்வளவுதான் அங்கிருந்து மருண்டு ஓடினான். புலியும் அவனைத் துரத்தியது. ‘நன்றி மகாதேவா, இந்த அப்பாவி வேடனுக்கு நற்கதி அருளுங்கள்’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார் முனிவர்.
ஓடிய வேடன் சற்றுத் தொலைவிலிருந்த வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். தன் விழிகளில் செம்மை நீக்கி கருணை ஒளிர, இவன் தானறியாமல் செய்யப்போகும் நல்வினைக்கு இவனுக்கு நற்கதி அருள தீர்மானித்தது புலியாய் வந்த சிவம். இரவு வந்தது. பசியும் பயமும் வேடனைப் பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல் வில்வத் தளிர்களை உருவி புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக அதனை ஏற்றுக்கொண்டது. அன்று இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்திலிருந்து இலைகளைப் பறித்து போட்டபடியே இருந்தான் வேடன். பொழுது விடிந்தது, மரத்துக்குக் கீழே தான் போட்ட வில்வ இலைகள் ஒரு பெரும் குவியலாக இருக்கக் கண்டான். புலியைக் காணோம். பயம் நீங்கியவனாக மரத்திலிருந்து இறங்கிய அவன் அந்த வில்வக் குவியலைத் தன் கைகளால் விலக்கிப் பார்க்க உள்ளே சிவ லிங்கம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளித்தது. பளிச்சென்று தோன்றிய பேரொளியில் ஈசன் அவனுக்கு தரிசனமளித்து, ஆட்கொண்டார்.
பிரம்மனும் விஷ்ணுவும் அந்த அதிசயத்தைக் காண அத்தலத்தில் தோன்றினர். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் வேடனை நெருங்கினார். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். சற்று தொலைவே இருந்த நந்திதேவரை ஈசன் பார்க்க, நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனை சற்று தூரத்தில் நிறுத்தினார். எமன் அங்கேயே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதில் நீராடி, ஈசனைத் தொழ, அவரும் எமனை விடுவித்தார். இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை
யாராலும் தடுக்க முடியாது.
இத்தலத்தை எமதர்மனால் மிதிக்க முடியாது என்பதால் எமபயம் நீக்கும் தலமாகும். மகாசிவராத்திரியின் மகத்துவத்தை விளக்கும் தலமும் இ துதான்.
சிவராத்திரி தினத்தன்று தூங்கும் ஒரு குழந்தையின் நகையைத் திருடுவதற்காக ஒருவன் அதனைக் கொலை செய்து விட்டதாகவும் அடியார் பிரார்த்தனைக்கிரங்கி இறைவன் அக்குழந்தையை உயிர்பித்ததாகவும் இதனால் மகவருளீசர் எனவும் இறைவன் பெயர் பெற்றார். தன் தேயும் தன்மையை இறைவன் போக்கியதால் மகிழ்ந்த அக்கினி, ஒரு தீர்த்தம் அமைத்தது. பிரம்மனும் இங்கே ஒரு புஷ்கரணியை உருவாக்கி, ஈசனை வழிபட்டு, படைப் புத் தொழிலை பெற்றான். விஷ்ணு இத்தலத்தில் தவமியற்றியதால் அரியீசர் என்றும் இத்தல ஈசன் அழைக்கப்படுகிறார்.
ஒரு சமயம் சிவபெருமான் உமா தேவியோடு கயிலையிலிருந்து தென்னாட்டிற்கு எழுந்தருளினார். அப்போது காவிரியின் வடகரையில் மிகச் செழிப்பாக காணப்பட்ட இத்தலத்தினை கண்டு இங்கேயே எழுந்தருளினர். இதனைக் கண்ட பூமிதேவி, அவர்களை வணங்கி வழிபட, இத்தலம் பூமிபுரம் என்றும் பெயர் பெற்றது. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் பெருமானின் ஆலோசனைப்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று அவை தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத் திற்கு வில்வாரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேஸ்வரர் என்றும் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
திருவைகாவூர், பச்சை வயல் நிறைந்த அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே தீர்த்தம். தலத்தின் தொன்மையை கோயிலின் ராஜகோபுரத்தை பார்க்கும்போதேஉணரலாம். ராஜகோபுரத்திலிருந்து உள்கோபுரம் போகும் வழி நீண்டு நெடியதாக இருக்கிறது. ஈசனை நோக்காது, வாயிலை நோக்கிய, எமனைத் தடுத்து நிறுத்திய கோலத்தில் நந்திதேவரை தரிசிக்கலாம். கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கோயிலின் முகப்பு எளிய, சிறு மண்டபமாக அமைந்துள்ளது. தென்புறத்து வாயிலில் கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சந்நதி அமைந்திருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்பது போன்று நந்தி தேவர் கிழக்கு நோக்கியுள்ளார்.
மிகப் பழமையான ஆலயமாதலால் உட்கோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். மகா மண்டபத்தின் அருகேயே கையில் கோலோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். தட்சிணாமூர்த்தி நின்றகோலத்தில் மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக துவார பாலகர்களாக பிரம்மனும் விஷ்ணுவும் நிற்கிறார்கள்! அடுத்து அர்த்த மண்டபத்திற்குள் உள்ள நந்திதேவரும் வாசலையே நோக்குகிறார். அவருக்குப் பின்னால் வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். அருட்பிரவாகமானது அலை அலையாக அவ்விடத்தில் பொங்கித் ததும்புவதை அனுபவித்துதான் உணர முடியும்.
கருவறை கோஷ்டத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் அத்தனை நேர்த்தி! அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் பிரமிப்பூட்டுகிறார்கள். அவர்களிலும் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி அருள் உலகம் மட்டுமல்லாது, கலையுலகத்தின் பொக்கிஷமுமாகும். இவரை அருணகிரி நாதர் பாடி மகிழ்ந்திருக்கிறார். கோயிலை வலம் வந்து துர்க்கையை வணங்கி, அருகேயுள்ள அம்பாள் சந்நதிக்குப் போகலாம். சர்வஜன ரட்சகி எனும் திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். சர்வஜன ரட்சகி என்று மிகப்பெரிய பொறுப்பை தனது திருப்பெயரோடு தாங்கி நிற்கிறாள். அழகும் அருளும் சேர்ந்து இலங்கும் திருமுகம்.
அபய-வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். அடுத்து நடராஜரை தனி சந்நதியில் தரிசிக்கிறோம். இக்கோயிலில் கொலுவிருக்கும் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் திகழ்கிறார்கள். மூலவர் வில்வவனேஸ்வரரை தரிசித்துவிட்டு தல விருட்சங்களான வில்வ மரங்களையும் தரிசிக்கலாம்.
மகாசிவராத்திரி தினத்தின் சிறப்பை இத¢தலத்தில் விளக்க இம்மரங்கள் சாட்சிகளாக உள்ளன. வேடனுக்கு தஞ்சமளித்து பின் மோட்சமும் வாங்கித் தந்த இடமல்லவா! இந்த மரத்தை வணங்கி, வில்வ மரத்தின் மேற்புறத்தில், சப்த மாதர்கள் தவஞ்செய்யும் காட்சியை கண்டு, மேற்கு பிராகாரத்திலுள்ள வல்லப விநாயகரை வழிபடலாம்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் இந்த கோயிலுக்காக கொடுத்த நிலங்கள் பற்றி நிறைய கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. மாசி மாத மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜையும் வேடனுக்கு மோட்சமளித்த நிகழ்வும் அமாவாசை அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் தீர்த்தவாரியும் நடை பெறுகின்றன. நோயின் கடுமை தாங்க முடியாதவர்கள், மரண பயம் கொண்டவர்கள், இத்தலத்தை மிதித்தவுடன் குணமாகிறார்கள். இத்தலத்தின் எல்லையில் நின்று, ‘‘அவரைக் காப்பாற்றுங்கள்’’ என்று வெறுமே சொல்லிவிட்டால் கூட போதும் என்கிறது, தலபுராணம். ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான, எமபயம் போக்கும் தலம் இதுவேயாகும்.
No comments:
Post a Comment