Sunday, 16 October 2016

குருவின் அவசியம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
-திருமந்திரம் (139)




குருவின் அவசியம்



ஒருவரின் கர்ம வினைகளைக் களைந்து இறைவனை காட்டக்கூடியவரே குரு.வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குரு அவசியம் ,குரு இல்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கை,இறைவனிடம் நம் வைக்க வேண்டிய முதல் பிரார்த்தனையே இறைவா எனக்கான குருவை எனக்குக் காட்டு என்பதேயாகும். உங்களுக்கு குரு கிடைக்கும் வரை உங்களுக்கு பிடித்தமான மகானை பின்பற்றி வரலாம்.குருவை தேர்ந்தெடுக்கும் முன் அவரை சோதனை (TEST )செய்து கூட எடுத்துக்கொள்ளலாம் அதில் தவறில்லை .குருவாக ஒருவரை தேர்ந்தெடுத்த பின் அவரை சோதனை செய்வது ,அல்லது அவரை விமர்சித்து அவரை விட்டு விலகுவது அவர் சொல்லும் போதனைக்கு மாற்றமாக நடப்பது முதலிய செயல்கள் உங்களுக்கு சோதனையாக முடிந்து விடும் .

குரு துரோகம் பொல்லாதது,குரு அருள் இல்லையேல் திரு அருள் இல்லை

பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே

-திருமந்திரம் (530)

திருக்கைலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001 வது குரு மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை
ஸ்ரீ -ல-ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்களின் இறைவாக்கினபடி

"எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாச்சலா "

இந்தமந்திரத்தை அனுதினமும் சொன்னீர்கள் என்றால் உங்களுக்கான குரு உங்களை வந்தடைவது உறுதி .

மற்றும் திரு அண்ணாமலையை 1000 முறை கிரிவலம் வந்தாலும் உங்களுக்கான குரு உங்களை சந்திப்பது உறுதி .



குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே. (10)

ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார்.

குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம்.

கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் ஆணையை ஏற்று யிவ்வுலகிற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும்.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில் அன்பு நெறி காணப்படுமா ?

கட்டையில் நெருப்புள்ளது. அந்த நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர, வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன் சேர்த்து உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான் வெளியே கொண்டுவர முடியும்.

பசுவிடம் பால் பெறுவதற்கு கன்றுக்குட்டி அவசியமாதல் போல, சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள் அவசியமாகும்.

சூரிய காந்தக் கல்லின் மீது சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல, குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம் தோன்றும். குருவினால் யிப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்க :-


"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக" என்றும் திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார். போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்பதேயிதன் உட்பொருள். பிறகு குருடும் குருடும் கூடிவிளையாடி குழியில் விழுந்தாற் போலாகிவிடும். 

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழுமாறே (10-1680)


(குருட்டினை நீக்குதல்=அறியாமையை நீக்குதல்; குருடு=அறிவிலி; குழிவிழுதல்=துன்பத்திற்குள்ளாதல்)

அறியாமையைப் போகும் நல்லாசிரியரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் தெளிவு பெற்றவராக யிருத்தல் வேண்டும். குரு என்பவர் வாழ்ந்து காட்டுபவர் ஆவார். அவர் வாழும் வாழ்க்கையே பாடமாக அமையும். குரு உலகத்தின் மீது பற்றற்றும், சிவத்தின் மீது மாறாத அன்பும் உடையவராகத் திகழ்வார். அவரால் உலகம் பல நன்மைகளை அடையும். அத்தகைய குருவின் திருமேனியைக் கண்டாலே புண்ணியம் என்கிறார் திருமூலர். 

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. (10)

*

No comments:

Post a Comment