வைகுண்ட ஏகாதசி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். வைகுண்ட ஏகாதசி திருநாளன்று சொர்க்க வாசல் திறக்கப்படும். அங்குள்ள சொர்க்க வாசற்படியை மிதித்தால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்றைய தினம் சொர்க்க வாசலை மிதிக்க லட்சகணக்கான பக்தர்கள் பெருமாள் கோவிலில் கூடுவார்கள்.வைணவக் கோவில்களில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோவில். அங்கு பெருமாள் அனந்தசயனத்தில் அருள்பாலிக்கிறார். திருவரங்கத்தில் எம்பெருமாள் நீண்ட நெடும் திருமேனியாக 21 அடி அளவில் அனந்த சயனத்தில் சயனித்திருக்கிறார். ஒரு திருக்கை தலையை தாங்கியிருக்க மற்றொரு கையை கால் மேல் வைத்து அருகில் திருமகளுடனும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும் இருக்க அருள் பாலித்து வருகிறார் பெருமாள். திருவரங்க பெருமாள் கோவிலில் வருடத்திற்கு 322 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் மிகச் சிறப்பானது வைகுண்ட ஏகாதசி. இந்த திருநாள் பகல் 10 ராப்பத்து என இரண்டு பிரிவாக நடைபெறும். ராப்பத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் எம்பெருமாளின் உற்சவர் சொர்க்க வாசல் எழுந்தருள்வார். அன்று இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து பஜனை பாடல்களில் ஈடுபடுவர். அன்றைய தினம் கண்விழிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment